இஸ்ரேல் செய்த காரியம்: ஆதரவு தந்த அமெரிக்காவுக்கே அதிர்ச்சி | Israel strikes | Gaza airstrikes
ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு உதவிய லெபனான், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 8 முதல் 10ம் தேதி வரையிலான 72 மணி நேரத்தில், ஆறு நாடுகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. முதலில் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல்நடத்திய தாக்குதலில் அங்கு 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியேற, காசாவில் உள்ள உயரமான கட்டடங்கள், உள்கட்டமைப்புகள் மீது குண்டு வீசப்பட்டது. கடந்த 8ம் தேதி இஸ்ரேல் போர் விமானங்கள், லெபனானின் பெக்கா மற்றும் ஹெர்மல் மாவட்டங்களில் தாக்குதல் நடத்தின. லெபனானுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஹெஸ்பொல்லாவின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை இலக்காக வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. அடுத்து சிரியாவில் 8ம் தேதி இரவு இஸ்ரேல் போர் விமானங்கள் பல இடங்களை தாக்கின. ஹோம்ஸில் உள்ள சிரிய விமானப்படை தளம் மற்றும் லடாக்கியாவுக்கு அருகிலுள்ள ராணுவ கட்டடம் அழிக்கப்பட்டன. இதை தொடர்ந்து காசாவிற்கு இஸ்ரேலின் தடையை மீறி உதவி பொருட்களை அனுப்புவதற்காக, இத்தாலி புளோடில்லா என்ற கப்பலை அனுப்பியது. இது செப்டம்பர் 10ம் தேதி துனீஷியா துறைமுகத்தை அடைந்தது. அப்போது அந்த கப்பலை, ட்ரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் இஸ்ரேல் தாக்கியது. இதனால், கப்பலின் மேற்பகுதியில் தீ பிடித்தது. அது உடனடியாக அணைக்கப்பட்டது. அடுத்து இஸ்ரேல் விமானப்படை கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் தலைமை அலுவலகத்தை தாக்கியது. இதில், ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் மகன், அவரது அலுவலக இயக்குநர், மூன்று பாதுகாவலர் மற்றும் ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரி என ஆறு பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் தப்பித்ததாக கூறப்படுகிறது. கடைசியாக ஹவுதி பயங்கரவாதிகள் வசமுள்ள ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.