ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பிய அமலாக்கத்துறை! Vaithilingam | ADMK Ex Minister | ED Case
2011 முதல் 2016 வரை, அ.தி.மு.க. ஆட்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது, சென்னை அடுத்த பெருங்களத்துாரில், கட்டுமான நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட, சட்ட விரோதமாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக, வைத்தியலிங்கத்துக்கு 28 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, வைத்திலிங்கம், அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆண்டு, சென்னை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில், வைத்திலிங்கம், அவரது மகன்கள், உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அவற்றை ஆய்வு செய்தபோது, லஞ்சப்பணம் கைமாறிய விவரம் தெரிய வந்தது. வைத்திலிங்கம் மகன்கள், முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு நிலம் வாங்க, கட்டுமான நிறுவனம் கடனாக, 28 கோடி ரூபாய் கொடுத்து இருப்பது போல் கணக்கு காட்டப்பட்டு இருந்தது.