பல கட்ட சோதனை முடிந்தும் காத்திருப்பது இதற்கு தான்! | Vande Bharat Train | Vande Bharat Sleeper
அடுத்தகட்டமாக படுக்கை வசதி உள்ள வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இரவு நேரங்களில் இயக்க ரயில்வே திட்டமிட்டது. பெங்களூரில் உள்ள பி.இ.எம்.எல்., நிறுவனத்தில் முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டது. சென்ற ஆண்டு அக்டோபரில் இந்த ரயில் சென்னை ஐ.சி.எப்., ஆலைக்கு வந்தது. இதில் 16 ஏசி பெட்டிகள் உள்ளன. முதல் வகுப்பு பெட்டியில் வெந்நீரில் குளிக்கும் வசதி உள்ளது. ஒவ்வொரு இருக்கையிலும் புத்தகங்கள் வாசிப்பதற்கு வசதியாக, எல்.இ.டி., மின் விளக்கு, மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜிங் பாயின்ட் வசதிகள் உள்ளன. முதல் வகுப்பு ஏசி பெட்டியில், மேல் படுக்கைக்கு செல்ல ஏணி வசதி உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாக சிறிய உணவகம், உணவு பதப்படுத்தி வைக்க குளிர்பதன பெட்டி , சூடாக உணவு பரிமாறுவதற்கு தனி வசதியும் உள்ளன. சிசிடிவி கேமரா மற்றும் ரயில்கள் மோதலை தடுக்கும் தொழில்நுட்பம் என 30 வசதிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்ட ஆய்வுக்கு பின் இந்த ரயில் சென்ற ஆண்டு இறுதியில், டில்லிக்கு அனுப்பப்பட்டது. ராஜஸ்தான் கோட்டா - லாபன் இடையே மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. அனைத்து சோதனைகளும் முடிந்து ஆறு மாதங்களுக்கு முன் பாதுகாப்பு ஆணையரும் ஒப்புதல் அளித்து விட்டார். ஆனாலும் இன்னும் பயன்பாட்டிற்கு வராதது பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும். நீண்ட துாரம் செல்லும் தடத்தில், ஸ்லீப்பர் ரயில் ஒன்று மட்டுமே போதாது. மற்றொரு ரயிலும் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. 2வது ரயில் தயாரிப்பும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்பின் இந்த ரயில் போக்குவரத்து துவங்கும் என்றனர்.