சளி, வறட்டு இருமலுடன் மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்! | Viral Fever | Health Department |Chennai
தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்திலும், ஆங்காங்கே அதிகம் பெய்து வருகிறது. இரவில் கன மழை, பகலில் வெயில் என தட்ப வெப்ப நிலை மாறி மாறி நிலவுகிறது. இதன் எதிரொலியாக மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் சோர்வு, மாலைநேர குளிர், வறட்டு இருமல், சளியுடன் காய்ச்சல் பரவி வருகிறது. சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் உடல் வலி, தொண்டை வலி தொடர்வதால் மர்ம காய்ச்சல் பரவுகிறதோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் படையெடுக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில், நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், டெங்கு, நிமோனியா போன்ற இணை காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.