கரையில் இரவு வரை அரண்டு நின்ற மக்கள் | Virudhunagar | Rakachi Amman Temple
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ராக்காச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மீன் கொத்திப்பாறை நீர்வீழ்ச்சியிலும், கல்லாற்றிலும் மழை பெய்யும் போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குளிக்க செல்வது வழக்கம். தீபாவளி விடுமுறை வெள்ளியன்று ஏராளமானோர் ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்குள்ள நீர்வீழ்ச்சியில் குளித்தனர். மாலை 5.30க்கு மேற்குத்தொடர்ச்சி மலை உச்சியில் திடீரென கனமழை பெய்தது. நீர்வீழ்ச்சியிலும், ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு குளித்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 150க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்தனர். ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் மம்சாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தண்ணீர் வரத்து அதிகளவில் இருந்ததால் ஆற்றை கடக்க முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மீட்புபடையினர் ஆற்றில் நடந்து சென்று கயிறு கட்டி மக்களை ஒருவர் பின் ஒருவராக மீட்டு அழைத்து வந்தனர். இரவு 9.30 வரை மீட்பு பணி நடந்தது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அனைவரும் மீட்கப்பட்டனர்.