வயநாட்டில் சேற்றில் சிக்கி உயிருடன் தவித்த 4 பேர் மீட்பு | Wayanad landslide | 4 persons alive
மரணத்துடன் போராடி மீண்டு வந்த 4 பேர்! வயநாட்டில் இன்ப அதிர்ச்சி வயநாடு கோர நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூரல்மலை - முண்டக்கை பகுதியை இணைக்கும் பாலம் அடித்து செல்லப்பட்ட நிலையில், ராணுவ வீரர்களின் கடின முயற்சியால் நேற்று தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு நிலச்சரிவில் முழுமையாக புதைந்த முண்டக்கை பகுதியில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டு, பலரது உடல்கள் மீட்கப்பட்டன. 4-வது நாளாக மீட்பு பணிகள் தொடரும் நிலையில், ராணுவத்துடன் இஸ்ரோ கைகோர்த்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் பிடித்து அதன் முழு தகவல்களை இஸ்ரோ வழங்கி உள்ளது. அதன்படி, நிலச்சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும், ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், படவெட்டி குன்னு என்ற இடத்தில் வசித்த குடும்பத்தினரை காணவில்லை என உறவினர்கள் கொடுத்த தகவலின் பேரில், ராணுவ வீரர்கள் அந்த இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பேர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர்கள், அவர்களை பத்திரமாக மீட்டனர்.