உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உட்கட்சி பூசலால் திணறும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி! Chandrashekar Rao | BRS | BJP | Telangana Politics

உட்கட்சி பூசலால் திணறும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி! Chandrashekar Rao | BRS | BJP | Telangana Politics

ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர் சந்திரசேகர ராவ். தெலுங்கானா தனி மாநிலமாக உருவான பின், நடந்த முதல் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தவரும் அவரே. தொடர்ந்து இரு முறை வென்று ஆட்சியில் இருந்த அவர், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து ரேவந்த் ரெட்டி முதல்வரானார். தெலுங்கானாவில் பிரதான எதிர்க்கட்சியாக அவரது பாரத் ராஷ்ட்ர சமிதி உள்ளது. இந்நிலையில் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, பா.ஜ.வை நேரடியாக விமர்சிப்பதில்லை என வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இதனால் கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது. இந்நிலையில் பா.ஜ. மூத்த தலைவரும், அக்கட்சியின் லோக்சபா எம்.பி.யுமான ரமேஷ், புது குண்டை போட்டுள்ளார். அதாவது, பா.ஜ.வுடன் பாரத் ராஷ்ட்ர சமிதியை இணைக்க சந்திரசேகர ராவ் விரும்பினார் என, அவர் அளித்த பேட்டி தான், தெலுங்கானா அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தில் இருந்த ரமேஷ், 2019 தேர்தல் தோல்விக்கு பின், பா.ஜ.வில் இணைந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், அனகப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு அவர் வென்றார். அவரது சகோதரர் ராஜேஷ், நாடு முழுதும் உட்கட்டமைப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தெலுங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருகிறார். தெலுங்கானா அரசால் உருவாக்கப்பட்டு வரும், பியூச்சர் சிட்டி திட்டத்தில், ரமேஷின் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனத்துக்கு, 1,600 கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார். மேலும், கச்சிபவுலி பகுதியில் 400 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து, 10,000 கோடி ரூபாய் பெற ரேவந்த் ரெட்டிக்கு, ரமேஷ் உதவியதாகவும் அவர் கூறி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த ரமேஷ், சந்திரசேகர ராவ் குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனம், ஏலத்தில் பங்கேற்று டெண்டரை கைப்பற்றியது, என்றார். ரமேஷ் மேலும் கூறுகையில், டில்லியில் என்னை சந்தித்த சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்ட்ர சமிதியை பா.ஜ.வுடன் இணைக்க விரும்புவதாக தெரிவித்தார். தன் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும், அப்போது அவர் வலியுறுத்தினார். இது பொய் என, சந்திரசேகர ராவ் கூறலாம். ஆனால் என்னிடம் வீடியோ ஆதாரம் இருக்கிறது. மேலும், அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான விவரங்களும் என்னிடம் உள்ளன. தேவைப்பட்டால், சி.பி.ஐ.யிடம் அளித்து விசாரணை நடத்த சொல்வேன், என்றார். இதை வலுப்படுத்தும் வகையில், தெலுங்கானா பா.ஜ.வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரும், பா.ஜ.வுடன் பாரத் ராஷ்ட்ர சமிதியை சந்திரசேகர ராவ் இணைக்க விரும்பியதாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளது. ஏற்கனவே உட்கட்சி மோதலால் பாரத் ராஷ்ட்ர சமிதி திணறி வரும் நிலையில், இந்த பிரச்னையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ----

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ