ஈரோடு காங்கிரஸ் வட்டாரத்தில் கொந்தளிப்பு | Congress | Erode | Election
ஈவெரா குடும்பத்துக்கு இதுவரை ஒன்பது தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 10வது முறையும் அவர்களே போட்டியிட முயற்சி நடக்கிறது. இதனால் கட்சிக்காக உழைத்தவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர் என ஈரோடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் குமுறுகின்றனர். ஈவெரா குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் காங்கிரஸ் மற்றும் திமுக தலைமை அவர்களை பல நிலைகளில் ஆதரிக்கிறது. இதுவரை ஈவெரா குடும்பத்தினர் ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டு 4 முறை வென்றுள்ளனர். மறைந்த இளங்கோவன் 1984ல் சத்தியமங்கலம் எம்எல்ஏவாக வென்றார். 1989ல் பவானிசாகர் சட்டசபை தொகுதியிலும், 1996ல் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். 2004ல் கோபி எம்பியாக வெற்றி பெற்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார். 2009ல் ஈரோட்டிலும், 2014ல் திருப்பூரிலும் 2019ல் தேனியிலும் லோக்சபா தொகுதிக்கும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ல் ஈரோடு கிழக்கில் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா எம்எல்ஏவானார். அவர் இறந்ததால் 2023ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட இளங்கோவனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அவர் எம்எல்ஏவானார். இப்படி ஒன்பது தேர்தலில் ஈவெரா குடும்பத்தினர் சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கில் நடக்க இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில், 10வது முறையாக ஈவெரா குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்கின்றனர். அவருக்கு சீடு கொடுத்து எம்எல்ஏவாகி விட்டால் தொடர்ச்சியாக அவரே போட்டியிடுவாரே தவிர வேறு யாருக்கும் அங்கு போட்டியிட வாய்ப்பே கிடைக்காத சூழல் உருவாகும். எனவே இந்த முறை காங்கிரஸ் கட்சிக்காக ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்களில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என ஈரோடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறினர்.