மகாராஷ்டிரா பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு Devendra fadnavis| BJP| Maharashtra CM
மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பாஜ 132, சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 என மகாயுதி கூட்டணி 230 இடங்களில் வென்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைய தாண்டி பாஜ கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றாலும், முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் நீடித்தது. சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியை பாஜவுக்கு விட்டுத்தராமல் முரண்டு பிடித்ததால், சிக்கல் நீடித்தது. பாஜ தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக ஷிண்டே தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையிலும் அவர் இரட்டை மனநிலையில் இருந்ததாக கூறப்பட்டது. நாக்பூர், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் பாஜ கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே 5ம் தேதி மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்பு விழா மும்பையில் நடக்க உள்ளதாகவும், பிரதமர் மோடி அதில் பங்கேற்பார் என்றும் பாஜ அறிவித்தது.