விஜய் மீது வழக்கு... திமுக முக்கிய நடவடிக்கை | karur stampede | tvk vijay | dmk vs tvk karur issue
தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸ், ஒரு நபர் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகின்றன. கோர்ட்டிலும் விசாரணை நடக்கிறது. இன்னொரு பக்கம் சம்பவத்தை வைத்து மிகப்பெரிய அரசியலும் நடக்கிறது. பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட 8 எம்பிக்கள் குழு, கரூர் வந்து விசாரித்து திரும்பியுள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் கரூர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் விஜயிடம் தொலைபேசியில் பேசி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கணக்குகள் மாறக்கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. திமுக, தவெக இடையே தான் போட்டி என இதுவரை விஜய் பிரசாரம் செய்து வந்தார். ஆனால் கரூர் துயரச் சம்பவத்தால் ஏற்பட்ட நெருக்கடியால், அவர் கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவரை அதிமுக, பாஜ கூட்டணிக்குள் கொண்டு வர, அமித் ஷா தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்துவது போல தான் ராமநாதபுரம் அரசு விழாவில் முதல்வர் பேசினார். தமிழகத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் உடனே வராத, முறையாக நிதி தராத மத்திய நிதியமைச்சர், கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் பால விபத்து, கும்பமேளா நெரிசல் உயிரிழப்பின் போது விசாரணைக்குழு அனுப்பாத பாஜ, கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது. கரூர் துயரச் சம்பவத்தில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என்று பார்க்கிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக, பாஜ அணியில் விஜய் சேர்ந்தால், தங்கள் கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று திமுக நினைக்கிறது. அதனால், கரூர் துயரச் சம்பவத்தை பயன்படுத்தி, தவெகவுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கவும், விஜய் பிரசாரம் செய்ய முடியாத நிலையை உருவாக்கவும், திமுக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தில் தவெகவின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்த ஐகோர்ட், ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணை குழுவையும் அமைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய் பெயரை சேர்க்க, திமுக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவன், விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., அரசுக்கு என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எழுத்தாளர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள், சினிமா துறையினர் என பல பிரபலங்கள், விஜய் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு தயங்கக்கூடாது என்கின்றனர். குறிப்பாக, விஜய்க்கு எதிராக முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்பிக்கள் ரவிக்குமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் உள்ளிட்டோர் வெளியிட்ட கூட்டறிக்கை: கரூர் பிரசார கூட்டத்துக்கு தாமதமாக வந்த விஜய், கூட்டத்திற்குள் வந்த பின்னும் முகம் காட்டாமல், மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும் தான், 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை வீடியோ சான்றுகள் காட்டுகின்றன. மரண சம்பவம் நடந்து 2 நாட்களுக்குப் பின், வீடியோ வெளியிட்ட விஜய், எவ்வித குற்ற உணர்ச்சியோ, வருத்தமோ, தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாமல் பேசியுள்ளார். அரசின் மீது பழிசுமத்தி தப்பித்து விடும் உள்நோக்கம் தெரிகிறது. சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தமிழக அரசு தயங்கக் கூடாது என்று கூறி உள்ளனர். கோர்ட், கூட்டணி கட்சிகள், முன்னாள் அதிகாரிகள், பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோருவதால், விரைவில் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யவும், எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்றும் போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பாக பேசுகின்றனர். இதன் மூலம் அதிமுக, பாஜ கூட்டணியில் விஜய் இணைவதை தடுக்க திமுக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. #KarurStampede #VijayToArrest #TVKvsDMK #KarurIssueUpdate #TVKVijayUpdate #TamilNaduNews #Politics2026 #DMK #TVK #KarurNews #BreakingNews #TamilPolitics #ElectionUpdates #VijayNews #PoliticalAnalysis #TamilUpdates #CurrentEvents #VijayArrest #TrendingTopics #SocialIssues