அமைச்சரிடம் சமரச முயற்சியில் அதிகாரிகள் | Durai Murugan | DMK | Sand Quarries | Quarries
தமிழகத்தில் எம் - சாண்ட் பயன்பாடு அதிகரித்தாலும் கட்டுமான பணிக்கு ஆற்று மணல் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி உள்ளது. அதில் இப்போது 8 குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டையில் 3, கடலுாரில் 2, தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டையில் தலா ஒன்று என இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. நவம்பர் 1 முதல் மணல் குவாரிகளை திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தயாராகினர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால் மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது: புதிதாக திறக்கப்பட உள்ள குவாரிகளில், மணல் அள்ளி யார்டுகளுக்கு கொண்டு வரும் பொறுப்பை ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டும். மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பாவிடம் மொத்தமாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏற்கனவே இதில் ஒப்பந்ததாரராக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. அவருக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்க அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. புதிய ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர் வளத்துறை அதிகாரிகள் புதிய ஒப்பந்ததாரருக்கு அனுமதி பெற அமைச்சரிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் உடன்பாடு ஏற்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாக அவர்கள் கூறினர்.