தமிழக காங் 35 ஆண்டு வஞ்சிக்கப்படும் பின்னணி | General secretary post congress | TN congress
35 வருஷமா அந்த பதவி தரல தமிழகம் தக்காளி தொக்கா? மேலிடம் மீது TN காங் கொதிப்பு கடந்த 35 ஆண்டுகளாக, காங்கிரஸ் பொதுச்செயலர் பதவி மறுக்கப்பட்டு வருவதால், தமிழக காங்கிரசார் கடும் அதிருப்தியில் உள்ளனர். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் அகில இந்திய செயலர்கள் நிலையில் மாற்றம் செய்யப்பட்டது. 90 செயலர்கள் இருந்த நிலையில் 57 பேர் மட்டும் மீண்டும் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள 33 பேருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அவர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுச்செயலர் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இப்போது கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 12 பேர் அப்பொறுப்பில் உள்ளனர். இது தவிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் என்ற பதவிகளில் 14 பேர் உள்ளனர். இதில் தமிழக காங்கிரசை சேர்ந்த செல்லக்குமார், மாணிக் தாகூர் ஆகியோர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். இது மட்டுமே காங்கிரசில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாக கருதப்படுகிறது. அதனால் பொதுச்செயலர்கள் நியமனத்தில் இந்த முறையாவது தமிழக காங்கிரசை சேர்ந்த ஒருவருக்கு பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இந்திரா, ராஜிவ் காலத்தில் தமிழக காங்கிரசை சேர்ந்த மூப்பனார், மரகதம் சந்திரசேகர் ஆகியோர் பொதுச் செயலர்களாக இருந்துள்ளனர். இவர்களுக்கு பின் வேறு யாரும் தமிழகத்தில் இருந்து அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவில்லை. அதாவது 35 ஆண்டுகளாக தமிழக காங்கிரசார் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.