சைனிக்கு மோடி வாழ்த்து: 13 அமைச்சர்கள் பதவி ஏற்பு Nayab singh saini | Sworn in | CM Hariyana | 13 m
90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்ட சபைக்கு கடந்த 5ம்தேதி தேர்தல் நடந்தது. 8ம்தேதி ரிசல்ட் வெளியானது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வென்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதாவின் சட்ட சபை தலைவராக நயாப் சிங் சைனி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஹரியானா முதல்வராக அவர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது. அவருடன் 13 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஹரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் முதல்வர் சைனியை வாழ்த்தினர். ஏழைகளின் நலன், சமத்துவம் மற்றும் நல்ல ஆட்சிக்காக முழு சக்தியுடன் வேலை செய்வேன் என முதல்வராக பதவி ஏற்ற பிறகு சைனி கூறினார். குருஷேத்ரா மாவட்டத்தில், லட்வா தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் சைனி 1996 முதல் பாரதிய ஜனதாவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.