பதவி பறிக்கப்பட்டதால் குடும்பத்துடன் அன்புமணி ஆலோசனை | Ramadoss | Anbumani | PMK | Cold war | Presi
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான வேலையில் அனைத்து கட்சிகளும் பிசியாக இறங்கி விட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தடாலடி அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் தன் பக்கம் திருப்பினார் பாமக நிறுவனர் ராமதாஸ். தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் முரண்பாடு ஏற்பட்டதால் கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இந்நிலையில் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி நேற்று முன்தினம் ராமதாஸ் அறிவித்தார். இனி நானே தலைவர் என அறிவித்தவர், அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் கூறினார். ராமதாசின் இந்த அறிவிப்பு பாமகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் குடும்பத்தினர் ஆலோசித்தனர். ராமதாஸ் மகள்கள் ஸ்ரீ காந்தி, கவிதா குடும்பத்தினரும், சென்னை இசிஆர் பனையூரில் உள்ள அன்புமணி வீட்டில், அவரது மனைவி சவுமியா, மருமகன் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் 28ல், தனது மகள்வழி பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமக இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் நியமித்தார். அப்போது அந்த மேடையிலேயே, அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தனது முடிவில் இருந்து ராமதாஸ் பின்வாங்கவில்லை. இப்போது, அன்புமணியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ராமதாஸ் ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸ் தனது முடிவை, மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை. செயல் தலைவராக அன்புமணி கட்சியை பலப்படுத்தட்டும் என்கின்றனர் பாமக நிர்வாகிகள். கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை நான்தான் எடுப்பேன். செயல் தலைவராக, மே 11ல் நடக்கும் வன்னியர் இளைஞர் ஒற்றுமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தட்டும் என, தன்னை சந்திப்பவர்களிடம் ராமதாஸ் கூறியுள்ளார். ஆனாலும், குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகள் சிலரும் அன்புமணிக்காக ராமதாசிடம் சமாதானம் பேசி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.