மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா: முழு பின்னணி | M.K.Stalin order | Resignation | All zona
மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கு ஆன்லைனில் வரி விதித்ததில் நடந்த மோசடி சமீபத்தில் வெளியாகி பூதாகரமானது. குறிப்பாக மண்டலம் 2, 3, 4, 5ல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு விதித்த வரி குறைத்து நிர்ணயம் செய்தது தெரிய வந்தது. இதில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமன்றி மண்டல தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில், தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமன்றி மாநகாட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள உயர்நிலை அலுவலர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்ததை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி நிர்வாகிகளோடு நேரடி கலந்துரையாடலான உடன்பிறப்பே வா நிகழ்ச்சியின்போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யம் இன்றி பதவியை பறிப்பேன் என கூறி இருந்த ஸ்டாலின், இப்படி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். கிழக்கு மண்டல தலைவர் வாசுகி, வடக்கில் புவனேஸ்வரி, மத்தியில் பாண்டி செல்வி, தெற்கில் முகேஷ் சர்மா, மேற்கில் சுவிதாவும் தற்போது மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளனர். இவர்களில் வாசுகி தவிர மற்ற அனைவரிடமும் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 1ம் தேதி மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவுக்கு ஓரிரு நாட்கள் முன்பு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை அதிரடியாக கட்சியைவிட்டு நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டது. தற்போது அதன் தொடர்ச்சியாக மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.