உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்டாலின்-திருமாவளவன் சந்திப்பின் உண்மை பின்னணி | Stalin-Thirumavalavan meeting secret | VCK manadu

ஸ்டாலின்-திருமாவளவன் சந்திப்பின் உண்மை பின்னணி | Stalin-Thirumavalavan meeting secret | VCK manadu

விசிக மது ஒழிப்பு மாநாடு ஹைஜாக் திருமாவளவன் தலையில் விழுந்த இடி ஸ்டாலின் சந்திப்பில் என்ன தான் நடந்தது? கூட்டணியில் இருந்து கொண்டே, மது ஒழிப்பு மாநாடு அறிவித்து அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திய திருமாவளவனை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், மது ஒழிப்பு மாநாடுதானே; திமுகவும் பங்கேற்கும் என ஒரே போடாக போட்டு மாநாட்டின் இலக்கையே வெற்றிகரமாக திசை திருப்பிவிட்டார். மது ஒழிப்பு மாநாடு என முழங்கி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை, மதுவுக்கும் ஏனைய போதை பொருட்களுக்கும் எதிரான மாநாடு என சொல்ல வைத்து விட்டார் ஸ்டாலின். கள்ள சாராயம் குடித்து நிறைய பேர் பலியான கள்ளக்குறிச்சியில் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்த உடனே தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக் கொண்டது. பா.ஜ., மற்றும் பா.ம.க., நீங்கலாக மற்ற எல்லா கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கலாம் என திருமாவளவன் அறிவித்ததும் அரசியல் களம் தீப்பிடித்தது. அதில் எண்ணெய் ஊற்றுவதை போல, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை என்ற பழைய கோஷத்துக்கு திருமா புத்துயிர் அளித்தார். இதை கேட்டதும் பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவையும் குட்டையில் குதித்து வேகமாக குழப்ப துவங்கின. திருமாவளவனுக்கு ஆதரவாக இக்கட்சிகள் வெளியிட்ட ஒவ்வொரு கருத்தும் திமுக தலைமையை சீண்டிப் பார்க்கவே பயன்பட்டன. திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், மதுவிலக்கு பற்றி பேசினால், மது ஒழிப்பு மாநாடு நடத்தினால், கூட்டணியில் விரிசல் வந்தாலும் வரலாம். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில் எழுந்த இந்த சலசலப்பு தி.மு.க.,வில் தாக்கம் உண்டாக்க தவறவில்லை. ஊடகர்களின் சரமாரியான கேள்விகளுக்கு உறுதியான பதில் தர அமைச்சர் முத்துசாமி போன்ற சீனியர்களே திணறினர். சரியோ தப்போ மனதில் பட்டதை தைரியமாக பேசும் உதயநிதி கூட, திருமாவளவன் அதிமுகவை அழைத்திருப்பது அவரது விருப்பம் என சொல்லி நழுவினார். இதனால் கூட்டணி மாற திருமாவளவன் தயாராகி விட்டார்; அதற்கு அச்சாரம்தான் மது ஒழிப்பு மாநாடு என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுவடைந்தது. வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், கட்சியின் பவளவிழா நேரத்தில் இப்படி ஒரு பிரச்னையா என அதிருப்தி அடைந்தார். வடமாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சரை அழைத்து, திருமாவளவன் என்னதான் நினைக்கிறார் என்பதை கேட்டு சொல்லுங்கள் என அனுப்பி வைத்தார். அமைச்சர் கேட்டு வந்து சொல்லும் வரை கட்சியினர் வாய்கொடுத்து வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என எச்சரித்தார். குடும்பத்திலும் கட்சியிலும் உள்ள சீனியர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், அவர்கள் சுட்டிக் காட்டிய பழைய சம்பவங்களின் அடிப்படையில் இரு திட்டங்களை இறுதி செய்தார். அதன் தொடர்ச்சியாக, மூத்த அமைச்சரின் அறிவுரைப்படி திமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று காலை, திருமாவளவன் சந்தித்தார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு, பொன்முடி, விசிக பொதுச்செயலர் ரவிகுமார், துணை பொதுச்செயலர் சிந்தனைசெல்வன் ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்புக்கு பிறகு ஊடகர்களுக்கு சேதி சொல்லும் பொறுப்பை திருமாவளவனிடமே விட்டார் ஸ்டாலின். தன் கட்சியினர் வாய்திறக்க தேவையில்லை என கூறிவிட்டார். அதன்படி திருமா பேட்டி அளித்தபோது தான், நாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்பார்கள் என முதல்வர் தெரிவித்தார் என ஸ்டாலின் கொடுத்த ட்விஸ்டை அறிமுகம் செய்தார். அதை தொடர்ந்த அவரது பேச்சும் பதில்களும் எதிர்பார்த்த பாதையிலேயே பயணித்தன. தமிழகத்தில் நிகழ்ந்த கள்ள சாராய சாவுகளின் விளைவாக தாய்மார்கள் உகுத்த கண்ணீரின் பிரதிபலிப்பு தான் இந்த மாநாடு என இதுவரை சொல்லிக் கொண்டிருந்த திருமா, நாடு முழுமைக்கும் மது விலக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தது என்று உரத்த குரலில் பிரகடனம் செய்தார். மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு திமுகவை நான் அழைக்கவே இல்லை என்று திருமாவளவன் சொன்னதும் அந்த பேட்டியில் முக்கியத்துவம் பெற்றது.

செப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி