உ.பி. கூட்டணி பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? Uttarpradesh | Bye election | Rahul | Akilesh
உத்தரபிரதேசத்தின் 9 சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இண்டி கூட்டணியில் உள்ள சமாஜ்வாதியும், காங்கிரசும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்று பா.ஜ.வை அதிர வைத்தன. இந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சித்து வருகிறது. இந்த ஒன்பது தொகுதிகளில் ஒரு சில இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என சொல்லப்பட்டது. ஆனால் காங்கிரஸ் போட்டியிடவில்லை என கடைசியில் ஜகா வாங்கி விட்டது. இதற்கு, எங்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஏழு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சமாஜ்வாதி அறிவித்துவிட்டது. இது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது என காரணம் சொன்னது காங்கிரஸ். களத்தில் காங்கிரசுக்கு வேலை செய்ய ஆட்கள் இல்லை. மக்கள் ஆதரவும் குறைந்துவிட்டது; எனவே வெற்றி பெறுவது கடினம். சமாஜ்வாதியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அகிலேஷ் யாதவ் சொன்னாராம். இது ராகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். மஹாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. அங்கு நீங்கள் எங்கள் கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என, எதிர் பதில் அளித்தாராம் ராகுல்; அத்தோடு பேச்சு முறிந்து போனது, என டில்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பின் நாங்கள் போட்டியிடாவிட்டாலும் கூட்டணி கட்சி வெற்றிக்காக பாடுபடுவோம் என அறிவித்தது காங்கிரஸ். இன்னொரு விஷயமும் டில்லியில் அலசப்படுகிறது. ஜார்ஜ் சோரோஸ் என்ற அமெரிக்கர் ராகுலுக்கு ஆதரவளித்து, மோடிக்கு எதிராக வேலை செய்து வந்தார். இனிமேல் ராகுலை நம்பினால் எதுவும் நடக்காது என, இப்போது அகிலேஷ் யாதவ் பக்கம் திரும்பி விட்டாராம். இந்த ஒன்பது தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ உள்ளது. வெற்றி பெறவில்லையென்றால், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நிலை மோசமாகிவிடும்.