தமிகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா?: வானதி கேள்வி
பாஜ தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசனின் அறிக்கை: முருக பெருமானின் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். இங்கு தர்கா இருப்பதை காரணம் காட்டி, திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் முருகன் கோயிலை சீர்குலைக்கவும், அந்த மலையை சொந்தம் கொண்டாடி ஆக்ரமிக்கும் உள்நோக்கத்தில் சில சக்திகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்பி, தமது ஆதரவாளர்களுடன் சென்று திருப்பரங்குன்றம் மலை மீது அத்துமீறலில் ஈடுபட்டார். இதை பாஜ உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் சுட்டிக்காட்டியும் திமுக அரசு மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், குழப்பத்தை விளைவித்து அமைதியை கெடுக்க நினைக்கும் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் இந்து அமைப்புகள் இன்று போராட்டம் அறிவித்தன. ஆனால், அறுபடை வீட்டை காப்பாற்ற போராடும் இந்து அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. முருக பக்தர்களை ஒடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறா, காட்டாட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அந்நிய நாட்டு சக்திகளை ஒடுக்குவது போல் மண்ணின் மைந்தர்களை ஒடுக்க காவல்துறையை ஆயிரக்கணக்கில் ஏவி விட்டுள்ளது திமுக அரசு.