மணல் கடத்தலை தட்டி கேட்டவர் பரிதாபம்! 3 பேர் கைது | smuggling | Sand Theft | Vellore Police
தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பான புகார்கள் தலை தூக்கி உள்ள நிலையில் சில நாட்களுக்கு முன் இது தொடர்பான தகராறில் கரூர் வாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிவாசகம் வெட்டி கொல்லப்பட்டார். மணிவாசகம் மணல் கடத்தலை தட்டி கேட்டதால் தான் கொல்லப்பட்டதாக அதிமுக பொது செயலர் பழனிசாமி, பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருந்தனர். இந்த சூழலில் பேரணாம்பட்டு அருகே மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. வேலூர் பேரணாம்பட்டு அடுத்த எம்.வி குப்பம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் வயது 50. இவர் அதே பகுதியில் பாலாற்றங்கரை ஓரமுள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த சந்துரு கூட்டாளிகளுடன் இரவில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நேற்று சம்பவ இடத்திற்குச் சென்ற செந்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட சந்துருவை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அப்போது கைகலப்பாக மாறி செந்திலை, சந்துரு மண்வெட்டியால் முகத்தில் சரமாரியாக வெட்டி உள்ளார். பின் சந்துரு உட்பட 3 பேர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி போலீசார் செந்திலை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் செந்தில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். செந்திலை வெட்டிய சந்துரு கூட்டாளிகள் சூர்யா, சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.