உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai

அவிநாசி ரிதன்யா போல மதுரையிலும் ஒரு சம்பவம்! Dowry Death | Sellur | Madurai

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் வி.பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் அக்கினி. இவரது மகள் பிரியதர்ஷினிக்கும், செல்லுார் இலங்கேஸ்வரன் மகன் ரூபன்ராஜுக்கும் 2024 செப்டம்பர் 5ம் தேதி திருமணம் நடந்தது. ரூபன்ராஜின் சகோதரிக்கு, 300 சவரன் நகை வரதட்சணையாக அளித்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர். அதனால் பிரியதர்ஷினி குடும்பத்தாரிடமும் அதே அளவு நகையை, மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். இதற்கு அந்தளவுக்கு முடியாது; பாதியளவு நகை போடுகிறோம். மற்றதை, பின்னர் பேசிக்கொள்ளலாம் எனக்கூறி அக்கினி குடும்பத்தினர் திருமணத்தை முடித்தனர். ஒரே மாதத்தில் வரதட்சணை கேட்டு, பிரியதர்ஷினியை கணவர் வீட்டார் கொடுமைபடுத்தி உள்ளனர். தினமும் ரூபன்ராஜ் கடையை அடைத்து விட்டு, இரவு 11:30 மணிக்கு வீட்டுக்கு வந்த பின்தான், பிரியதர்ஷினி சாப்பிட வேண்டும் என, அவரது நாத்தனார் வாசுகிதேவி, மாமியார் தனபாக்கியம், மாமனார் இலங்கேஸ்வரன் மிரட்டியுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் ரூபன்ராஜ் தங்கை சாந்தினிதேவி, சித்தப்பா ரமேஷ், அத்தை உமா மகேஸ்வரி, மாமா சிங்கத்தமிழன் ஆகியோர் பாக்கி நகையை கேட்டு பிரச்னை செய்தனர். மார்ச் 15ல் அடித்து கொடுமைப்படுத்தியதில், காயமடைந்த பிரியதர்ஷினி ஆஸ்பிடலில் அட்மின் செய்யப்பட்டார். அவரது பெற்றோர், திருமணத்தை முன்னின்று நடத்திய குப்பணம்பட்டி தேவராஜ் என்பவரை அழைத்து மணமகன் வீட்டாரிடம் சமாதானம் பேசினர். அப்போது மேலும் 50 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் வழங்கினால் மகளை நல்ல முறையில் வாழ வைக்கலாம் என மணமகன் வீட்டார் பேரம் பேசி உள்ளனர். பிரியதர்ஷினி வீட்டார், இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்ட நிலையில், தொடர்ந்து துன்புறுத்தியதால் செல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்து, மகளை தங்களுடன் அழைத்துச் சென்றனர். பலமுறை பேச்சு நடத்தியும், நகை இன்றி சேர்ந்து வாழ முடியாது என, கணவர் வீட்டார் கூறியதால், பிரியதர்ஷினி மனமுடைந்தார். விரக்தியில் ஆகஸ்ட் 29ம் தேதி நாத்தனார் வாசுகிதேவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாவது வாழ்கை நடத்துவதாக கூறி அவர் செல்லுார் சென்றார். அன்று மதியம் பெண் வீட்டாரை தொடர்பு கொண்ட ரமேஷ் என்பவர், அரசு மருத்துவமனையில் பிரியதர்ஷினி கவலைக்கிடமாக உள்ளார் என அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பதறியடித்து அவர்கள் சென்று பார்த்தபோது, கையில் வெட்டுக் காயத்துடன் பிரியதர்ஷினி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என பெற்றோரிடம் புலம்பிய பிரியதர்ஷினி, ஆகஸ்ட் 30ம் தேதி இறந்தார். வரதட்சணை கொடுமையால், கையை அறுத்துக்கொண்டு அவர் தற்கொலை செய்துள்ளார். இதையறிந்த மணமகன் குடும்பத்தினர் அனைவரும் தலைமறைவாகினர். செல்லுார் போலீசார் வரதட்சணை வழக்கு பதிவு செய்து, ரூபன்ராஜ், ரமேஷ், உமா மகேஸ்வரி, சிங்கத்தமிழன், வாசுகிதேவி, முகுந்தன், இலங்கேஸ்வரன், தனபாக்கியம், சாந்தினிதேவி, தேவராஜ் உள்ளிட்ட மணமகன் குடும்பத்தினரை தேடி வருகின்றனர். #DowryCase #DowryDeath #Madurai #JusticeForVictims #SocialIssues #HumanRights #CrimeAwareness #WomenEmpowerment #DomesticViolence #FamilyJustice #LegalReform #SocialJustice #SupportWomen #AwarenessCampaign #EndDowrySystem #FightForJustice #WomenRights #Injustice #MaduraiUpdates

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை