துர்நாற்றம் வீசிய குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மக்கள் அவதி | Water issue | Bad smell in water
கடலூர் மாவட்டம் அயன் குறிஞ்சிப்பாடியில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நகர் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. திடீரென நேற்று மாலை முதல் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து மக்கள் புகார் சொன்னதும் உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக கடும் துர்நாற்றம் வீசுவதால் குடிநீர் தொட்டியில் மர்ம பொருள் ஏதாவது கலந்திருக்குமோ என அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால் தண்ணீர் இன்றி அவதி அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுமக்கள் அச்சத்தை தீர்க்கும் வகையில் குடிநீரில் துர்நாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதுடன், நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் விநியோகத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டையில் வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகத்தை உலுக்கியது. இப்போது கடலூரில் குடிநீர் துர்நாற்றத்துடன் விநியோகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.