செய்தி சுருக்கம் | 01 PM | 09-10-2024 | Short News Round Up | Dinamalar
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதில் உடன்பாடு எட்டவில்லை. நேற்று 30வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். போராட்ட பந்தல்கள் நள்ளிரவில் அகற்றப்பட்டது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலுக்கு பிறகு ஹரியானா மாநிலத்திலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48ல் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து 3வது முறையாக பாஜ ஆட்சி அமைக்கிறது. லோக்சபா தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும், 99 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி, தான் வென்று விட்டதை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவராக இல்லாமல் அக்கட்சியை வழிநடத்தி வரும் ராகுலை, பெரும் தலைவர் போல ஊடகங்கள் சித்தரித்தன. ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். ராகுல் மாயாஜாலம் நிகழ்த்துவார் என, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே திட்டமிட்ட பிரசாரத்தை மேற்கொண்டனர். ஊடகங்களில் ராகுல் பற்றிய செய்திகளே அதிகம் வந்தன. ஆனால் மக்கள் பாஜவையே தேர்ந்தெடுத்து உள்ளனர். தொடர்ந்து 3வது முறையாக ஒரு கட்சி ஆட்சியை தக்க வைப்பது சாதாரண விஷயம் அல்ல. தமிழகத்தில் திமுக தொடர்ந்து 2வது முறை வென்று ஆட்சி அமைத்ததில்லை என்ற உண்மையை தெரிந்து கொண்டால், ஹரியானாவில் பாஜ ஹாட்ரிக் வெற்றி பெற்றது எவ்வளவு பெரிய சாதனை என்பது புரியும். ஜம்மு - காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, சட்டசபை தேர்தல் நடப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் 62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ, 29-ல் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் சமூக, அரசியல் சூழல் புரிந்தவர்களுக்கு இந்த வெற்றி பெரும் சாதனை என்பது தெரியும். ஜம்மு காஷ்மீரில் 32 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6-ல் மட்டுமே வென்றுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் 25.64 சதவீதம், அதாவது 14 லட்சத்து 62 ஆயிரத்து 225 ஓட்டுகளை பாஜ பெற்று, அதிக ஓட்டுகள் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சிக்கு 42 இடங்கள் கிடைத்தாலும், பாஜவை விட குறைவாக 24.83 சதவீதம், அதாவது 14 லட்சத்து 16 ஆயிரத்து 080 ஓட்டுகளே கிடைத்துள்ளது. இரு மாநிலங்களிலும் பாஜவுக்கு சாதகமாகவே மக்கள் தீர்ப்பளித்து உள்ளனர். இரு மாநிலங்களிலும் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தனர். ஹரியானாவில் ராகுல் தான் முதல்வர் வேட்பாளர் என்பது போலவே காங்கிரசின் பிரசாரம் இருந்தது. ஆனால் மக்கள் தெளிவாக தீர்ப்பளித்து உள்ளனர். இரு மாநிலங்களிலும் ராகுலின் போலி பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு, இண்டி கூட்டணி கட்டமைத்த மாயையும் தகர்க்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தீர்ப்பளித்த ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு நன்றி. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஓராண்டுக்கு மேல் இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. காசாவில் 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மட்டும் 18 ஆயிரம் பேர். கிட்டத்தட்ட ஹமாஸ் கட்டமைப்புகளை தகர்த்து வீட்ட நிலையில், லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிகள் பக்கம் இஸ்ரேல் கவனம் திரும்பி உள்ளது. 4 வாரமாக படிப்படியாக தாக்குதலை தீவிரப்படுத்தி வந்த இஸ்ரேல் இப்போது முழு அளவிலான போரை அறிவித்துள்ளது. முதலில் தெற்கு லெபனானிலும், லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதலை நடத்தியது. பின்னர் தெற்கு லெபனானில் ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பி தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது. லெபனானில் இதுவரை 2100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12 லட்சம் பேர் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று போரை இன்னும் விரிவுப்படுத்தியது இஸ்ரேல். தெற்கு லெபனானை போல் தென்மேற்கு லெபனானை தரைவழியாக சென்று தகர்க்க ஆயிரக்கணக்கான துருப்புகளை அனுப்பி வைத்தது. இந்த நடவடிக்கைக்கு பிறகு லெபனான் மக்களுக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியது: உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் முத்து என்று உங்கள் நாடு அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது என்ன ஆனது? கொடுங்கோலர்களும் பயங்கரவாதிகளும் தான் லெபனானில் கோலோச்சுகின்றனர். ஒரு காலத்தில் சகிப்புத்தன்மைக்காகவும் அழகுக்காகவும் போற்றப்பட்ட நாடு லெபனான். இன்று குழப்பமான நாடாகவும் போர் பூமியாகவும் மாறிவிட்டது. லெபனானை காப்பாற்றிக்கொள்ளவும், பழைய லெபனானை மீட்டெடுக்கவும் இப்போதும் வாய்ப்புள்ளது. அதற்கு ஹெஸ்புலாவை ஒழிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து நீங்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். எந்த வகையிலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரக்கூடாது. இதையெல்லாம் செய்தால் உங்கள் பழைய லெபனானை திரும்ப பெறலாம். அமைதியும் செழிப்பும் நிறைந்த பாதையில் லெபனானை கொண்டு செல்ல முடியும். காசாவில் பேரழிவை ஏற்படுத்திய நீண்ட கால போர் எனும் படுகுழியில் லெபனான் விழும் முன் தற்காத்துக் கொள்ளுங்கள். ஹெஸ்புலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அவருக்கு பின் வந்தவர்கள், அடுத்தக்கட்ட தலைவர்கள் என ஆயிரம் ஹெஸ்புலாக்களை கொன்று விட்டோம். ஹெஸ்புலாவுக்கு முடிவு கட்டும் இடத்தில் இஸ்ரேல் உள்ளது. இஸ்ரேல் மக்களை பாதுகாக்கவும், அவர்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு திரும்பி செல்லவும் ஹெஸ்புலா கதையை முடித்தே தீருவோம். இஸ்ரேலை தற்காத்துக்கொள்ளும் உரிமை எங்களுக்கு உண்டு. போரில் இஸ்ரேல் வென்றே தீரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இதன் மூலம் காசாவை போல் லெபனானிலும் முழு நீள போரை இஸ்ரேல் துவங்கி விட்டது என்று கூறி உள்ளார்.