செய்தி சுருக்கம் | 08 AM | 01-11-2024 | Short News Round Up | Dinamalar
விஜய யாத்திரைக்காக கடந்த 28ம் தேதி சென்னை வந்த சிருங்கேரி சுவாமிகள், நான்காவது நாளாக மயிலாப்பூரில் உள்ள சுதர்மா இல்லத்தில் நேற்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். காலை 8 மணிக்கு சகஸ்ர சண்டி ஹோமம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியிடம் ஆசி பெற்றனர். பின் மாலை 4.30 மணிக்கு சுவாமிநாதன் குழுவினர் பஜனை பாடல்களை பாடினர். தொடர்ந்து ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மகா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடந்தது. மாலை 5.50 மணியளவில் சுதர்மா இல்லத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, சிருங்கேரி சுவாமிகளிடம் ஆசி பெற்றார். 20 நிமிடங்கள் அங்கிருந்து பின் புறப்பட்டு சென்றார். தமிழகம் நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சி மாடல் அரசை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு, 68 ஆண்டுகளுக்கு முன், நவம்பர் 1ம் தேதியான இதே நாளில் தான், மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழகம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் 1ம் தேதி தான் உண்மையான தமிழகம் நாள். இந்த நாளில் தமிழக மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதை நாம் சகோதர உணர்வுடன் ஏற்றுக் கொண்டோம். நம் நிலப்பரப்பை சகோதர மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக்கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே, நமக்கு நீரை கூட தர மறுக்கின்றன. மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க, இந்த நாளில் உறுதியேற்போம். அரை நுாற்றாண்டுக்கும் மேலாக, திராவிடம் என்ற காலாவதியாகி போன தத்துவத்தை பேசி, நம் உரிமைகளை இழந்து வருகிறோம். தமிழகம் என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழகம் அதன் திறனுக்குரிய வளர்ச்சியை எட்ட வேண்டும். அதற்காக வளர்ச்சி மாடல் அரசை உருவாக்க வேண்டும். அதன் வாயிலாக தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும், இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.