செய்தி சுருக்கம் | 01 PM | 29-06-2025 | Short News Round Up | Dinamalar
தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் திட்டம் மூலம் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் விடுபட்டவர்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மகளிர் உரிமை தொகையில் புதிதாக 3 பிரிவுகளில் தளர்வுகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்கள் இனி மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம். அரசு திட்டத்தின் கீழ் மானியம் பெற்று 4 சக்கரம் வாகனம் வைத்திருக்கும் குடும்ப பெண்களும் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பிக்கலாம். இந்திரா தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பிற பெண்களும் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.