செய்தி சுருக்கம் | 08 AM | 12-11-2024 | Short News Round Up | Dinamalar
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.