செய்தி சுருக்கம் | 08 AM | 14-02-2025 | Short News Round Up | Dinamalar
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, 2வது முறை அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, என் சிறந்த நண்பனே வி மிஸ்டு யு என மோடியை, டிரம்ப் வரவேற்றார். பதிலுக்கு மோடியும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, டிரம்ப்புக்கு, 140 கோடி இந்திய மக்களின் சார்பாக வாழ்த்துக்கள் என தெரிவித்தார். இருவரின் சந்திப்பை தொடர்ந்து மோடி பேசுகையில், இரு நாடுகளின் முன்னேற்றம், செழுமையை நோக்கி நாம் ஒன்றாக பயணம் செய்வோம். ரஷ்யா-உக்ரைன் போரை பொறுத்தவரை, அதிபர் டிரம்ப் அமைதியை மீட்டெடுக்க முயற்சி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பைப் பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தை அமெரிக்காவுடன் இணைந்து வலுப்படுத்துவோம். லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டனில் துணைத் தூதரகங்களை திறக்க முடிவு செய்திருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா - அமெரிக்கா ஒன்றாக இணைந்திருக்கின்றன. 2008ல் இந்தியாவில் இனப்படுகொலை செய்த குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததற்காக அதிபருக்கு நன்றி சொல்கிறேன். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்பப் பெற, இந்தியா தயாராக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், தவறாக வழிநடத்தப்பட்டு, பெரிய கனவுகளுடன் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனை தடுப்பது அவசியம்.