உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 AM | 30-06-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 AM | 30-06-2025 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் அதிமுக - பாஜ கூட்டணியை அமித் ஷா அறிவித்தபோது பழனிசாமி தலைமையில் தேஜ கூட்டணி ஆட்சி அமையும் என்றார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியானது. அதை பழனிசாமி மறுத்தார். கூட்டணி ஆட்சி தான், கூட்டணி அரசு இல்லை என விளக்கம் அளித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் வாய்ப்பில்லை என்றனர். இப்பிரச்னை முடிவுக்கு வந்த சூழலில் சமீபத்தில் அமித் ஷா அளித்த பேட்டியில் தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜ அங்கம் வகிக்கும். அதிமுகவில் இருந்து ஒருவர் முதல்வர் ஆவார் என கூறியிருந்தார். ஆட்சியில் பாஜ அங்கம் மற்றும் முதல்வர் வேட்பாளராக தன் பெயரை கூறாததும், பழனிசாமிக்கு அதிர்ச்சியை அளித்தது. அதிமுக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் இது குறித்து கேள்வி எழுப்ப தொடங்கினர். இதுகுறித்து வெளியில் யாரும் பேச வேண்டாம் என பழனிசாமி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், வரும் 7ல் கொங்கு மண்டலத்திலிருந்து தேர்தல் சுற்றுப்பயணத்தை பழனிசாமி துவக்க உள்ளார். அப்போது முதல்வர் வேட்பாளராக தன்னை பிரகடனப்படுத்தும் வகையில் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற திட்டத்தை வகுத்துள்ளார். இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: சமீபத்தில் கோவையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அவர்களின் சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதே நேரம் அமித் ஷா அளித்த பேட்டியில், கூட்டணி வெற்றி பெற்றால் பழனிசாமி முதல்வர் ஆவார் என அவருடைய பெயரை குறிப்பிடவில்லை. இது பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுக்குப் பின் வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோரில் யாராவது ஒருவரை முதல்வராக்க பாஜ தரப்பு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாஜவிடம் இப்படிப்பட்ட முயற்சிகள் எதுவும் இருந்தால், அதை உடனே களைந்துவிட வேண்டும் என பழனிசாமி விரும்புகிறார். கட்சி சின்னம் குறித்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பான விசாரணையை கோர்ட் ஜூலை 4க்கு ஒத்தி வைத்துள்ளது. அதேபோல சுற்றுப்பயணத்தின்போது தன்னை முதல்வர் வேட்பாளராக பிரகடனப்படுத்தி அதை மக்கள் மத்தியில் பதிய வைத்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் பழனிசாமி உள்ளார். அதிமுக ஐடி அணியினரும், முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை முன்னிறுத்தி பல நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர் என்றனர்.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ