செய்தி சுருக்கம் | 08 PM | 07-04-2025 | Short News Round Up | Dinamalar
அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் ஒரு தொழில் அதிபர். கட்டுமான நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். வங்கி பரிவர்த்தனை தொடர்பான விவகாரத்தில் ரவிச்சந்திரனை குறி வைத்து இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டை ஆரம்பித்தனர். சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை , சிஐடி காலனி, பெசன்ட் நகர், எம் ஆர் சி நகர் மற்றும் கோவை, திருச்சி உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. நேருவின் மகனும் எம்பியுமான அருண் வீடு, மகள் வீடு, நேருவின் இன்னொரு தம்பி ராமஜெயம் வீடு என சோதனை விரிந்தது. இன்னொரு பக்கம் திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சல்லடை போட்டனர். காலை 7 மணி முதல் அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தது. மாலை 6 மணி வரை சோதனை நீடித்தது. 11 மணி நேரம் நடந்த இந்த ரெய்டில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் நேரு குடும்பத்தினர் கணக்கு வைத்திருக்கும் இரு முக்கிய வங்கிகளை சேர்ந்த அதிகாரிகளை நேரு வீட்டுக்கு வரவழைத்தனர். கைப்பற்றிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டி விசாரணை நடத்தினர். பின்னர் முக்கிய ஆவணங்களை ஒரு வெள்ளை நிற பெட்டியில் வைத்து காரில் எடுத்து சென்றனர். இது தவிர பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்ற தகவல் உடனடியாக வெளியாகவில்லை. அதே போல் எவ்வளவு கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர். அமைச்சர் நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.