செய்தி சுருக்கம் | 08 PM | 24-09-2024 | Short News Round Up | Dinamalar
வட மாநிலங்களில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் காற்றின் திசையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்தது. தற்போது தமிழகப் பகுதிகளின் மேல் காற்று திசையின் போக்கு மாற்றம் அடைந்திருப்பதால் மழை தரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில், கிண்டி, அடையாறு, சேப்பாக்கம், திருவல்லிக்கேனி, மயிலாப்பூர், திருவான்மியூர், தி.நகர், வட பழனி, அசோக் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தென் சென்னை பகுதியில் இரவு நேரத்தில் நகரின் பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.