செய்தி சுருக்கம் | 08 PM | 18-12-2024 | Short News Round Up | Dinamalar
ஓட்டுக்காக அம்பேத்கர் அம்பேத்கர் என ஓயாமல் சொல்வது காங்கிரசாருக்கு ஃபேஷன் ஆகிவிட்டது: கடவுள் பெயரை 100 தடவை சொன்னாலாவது சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்லிமென்ட்டில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இரு சபைகளிலும் இன்று அமளி துமளியில் ஈடுபட்டனர். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டாக்டர் அம்பேத்கரை அவமதித்ததோடு மட்டுமல்லாமல், எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களை புறக்கணித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றை அமித்ஷா அம்பலப்படுத்தினார். அவர் எடுத்துரைத்த உண்மைகளால் காங்கிரசார் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். திருடனுக்கு தேள்கொட்டியதைப்போன்ற நிலைக்கு ஆளானார்கள். அதனால்தான் அவர்கள் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நிலை பரிதாபமாக இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். டாக்டர் அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்த பாவங்களின் பட்டியலில் பின்வருவன அடங்கும்: அவரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தார்கள். நேரு அவருக்கு எதிராக பிரசாரம் செய்தார். அம்பேத்கரின் தோல்வியை கவுரவ பிரச்னையாக நினைத்து செயல்பட்டனர். டாக்டர் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது மறுக்கப்பட்டது.