செய்தி சுருக்கம் | 01 PM | 12-04-2025 | Short News Round Up | Dinamalar
சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்து இருப்பது சட்டவிரோதம். மசோதாக்களை ஜனாதிபதிக்கு முடிவுக்கு அனுப்பியது சரியானதல்ல. அந்த 10 மசோதாக்களுக்கும் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளிக்கிறோம். கவர்னருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. நிறுத்தி வைத்திருக்கும் மசோதாவை செல்லாது எனக்கூற கவர்னருக்கு உரிமை இல்லை என தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 413 பக்க முழு தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழக அரசின் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மசோதாக்களை அனுப்பிய 18 நவம்பர் 2023ல், கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.