UPDATED : ஜூலை 09, 2026 09:56 PM | ADDED : ஜூலை 09, 2026 09:53 PM
பாரம்பரியமும், நவீன சிந்தனையும் கைகோர்க்கும் போது அங்கு கலை புது வடிவம் பெறுகிறது. அதற்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குகிறது சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகம். தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பிரம்மாண்டமான கைவினைப் பொருள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது.ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அங்குள்ள கலைஞர்களின் கைகளில் தான் வாழ்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கிராமப்புறங்களில் முடங்கிக் கிடக்கும் அரிய திறமைகளை வெளிக்கொண்டு வர இக்கண்காட்சி ஒரு பாலமாக அமைந்துள்ளது. கலைஞர்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும், இடைத்தரகர்கள் இன்றி தங்களது படைப்புகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவும் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் இந்த உன்னதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.இக்கண்காட்சியின் மிக முக்கிய ஈர்ப்பாக அமைந்திருப்பது மரத்தினால் செய்யப்பட்ட அதிசயப் பொருட்கள் ஆகும். வெறும் காட்சிப் பொருளாக மட்டுமில்லாமல், இயங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள:மரத்தாலான டெலிபோன்,மரத்தாலான தையல் இயந்திரம்,மரத்தாலான மின்விசிறி ஆகியவை பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. கைவினைக் கலைஞர்களின் தொழில்நுட்ப அறிவிற்கும், நுணுக்கமான வேலைப்பாட்டிற்கும் இவை சான்றாகத் திகழ்கின்றன.இந்தக் கண்காட்சியின் மற்றொரு பிரதான சிறப்பம்சமாக அமைந்திருப்பது தமிழக முதல்வர் விஜயின் மணல் ஓவியங்கள் ஆகும். மிக நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மணல் ஓவியங்கள், கண்காட்சிக்கு வரும் அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. கலை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது தலைவர்களையும் மக்களையும் இணைக்கும் ஒரு புன்னகை பாலம் என்பதை இந்த ஓவியங்கள் உணர்த்துகின்றன.இடம்: அருங்காட்சியக வளாகம், எழும்பூர், சென்னை. அனுமதி இலவசம். வருகின்ற ஜூலை 19 ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.இயந்திரமயமாகிப்போன இந்த அவசர உலகில், கைகளால் வடிக்கப்படும் ஒவ்வொரு கலைப்பொருளின் பின்னாலும் ஒரு கலைஞனின் பல நாள் உழைப்பும், கனவும் ஒளிந்திருக்கிறது. எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி, வெறும் பொருட்களின் விற்பனை மையமல்ல; அது நம் பாரம்பரியத்தின் பெருமைமிகு அடையாளம்.குடும்பத்தினருடன், குறிப்பாக குழந்தைகளுடன் இந்த கண்காட்சிக்குச் சென்று வருவது நம் மண்ணின் கலைகளைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். வாங்குவது ஒரு பொருளாக இருக்கலாம், ஆனால் அது ஒரு கைவினைக் கலைஞனின் வாழ்வை ஒளிரச் செய்யும்!படங்கள்:யுவராஜ்-எல்.முருகராஜ்