உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / இஸ்ரோ விஞ்ஞானி ஆவேன் மாணவ விஞ்ஞானி ரிஷிதாவின் லட்சியம்

இஸ்ரோ விஞ்ஞானி ஆவேன் மாணவ விஞ்ஞானி ரிஷிதாவின் லட்சியம்

'எ னக்கு அறிவியலில் ஆர்வம் இருந்தது. அதனை டெவலப் செய்ய வாய்ப்பு இல்லை. அந்த வாய்ப்பு எனது மகளுக்கு கிடைக்கவே அவரது ஆர்வத்துக்கு உரமிடுகிறேன்'' என்கிறார், மதுரை மாநகராட்சி காக்கைப்பாடினியார் மேல்நிலைப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி என்.எம். ரிஷிதாவின் தந்தை நந்தகுமார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஊழியரான இவரது ஆசை வீண்போகாது என்பது வீடு முழுவதும் ரிஷிதா 14, வாங்கிய பதக்கங்கள், ஷீல்டுகள், விருதுகள், சான்றிதழ்கள் என குவிந்து கிடப்பதைப் பார்த்தாலே புரிகிறது. அலைபேசி, கம்ப்யூட்டர் என கேட்ஜெட்கள் கிடைத்தால் சமூகவலை தளங்களை தட்டி விளையாடுவோரே அதிகம். ஆனால் ரிஷிதா மாறுபட்டவர். அலைபேசி, கம்ப்யூட்டர் செயல்பாடுகள், அதற்கான கோடிங்குகளை அறிய முயற்சிப்பார். 'கொரோனா காலத்தில் 'ஸ்கில் ஸ்கூல்' எனும் ஆன்லைன் பயிற்சியாளர் பாலகிருஷ்ணன் மூலம் 'கோடிங்' பயிற்சி பெற்றார். ரிஷிதா 'தெர்மோ எலக்ட்ரிக் ஜெனரேட்டர்' கருவியை கண்டுபிடித்தார். 'சோலார் மின்தயாரிப்பில் பேட்டரி பயன்பாட்டால் 'மாசு' வாய்ப்புள்ளது. ஆனால் எனது கண்டுபிடிப்பில், வெப்ப ஆற்றலால் மின்சாதனம் இயங்குவதால் மாசு வாய்ப்பில்லை என்றார். அவரது கண்டுபிடிப்பு மாநகராட்சி பள்ளிகள் பங்கேற்ற போட்டியில் முதலிடம் பெற்றது. கொடைக்கானல் 'சோலார் அப்சர்வேட்டரியில் பள்ளிகள் பங்கேற்ற போட்டியில் முதல் பரிசு பெற்றார். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது, அகமதாபாத்தில் விமானம் விழுந்து பலர் இறந்த சம்பவம் இவரது இதயத்தை நொறுக்கியது. விமான விபத்துகளை தடுக்க யோசித்தார். பறக்கும் விமானத்தின் முன் பறவையோ, வேறு தடையோ, விமானத்திற்குள் தீயோ, புகையோ கிளம்பினால்... அதற்கும் 'சென்சார்'களை அமைத்து, பாதிப்பு விவரம் கம்ப்யூட்டர் திரையில் தெரியும் வகையில் 'கோடிங்'குகளை உருவாக்கினார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் நினைவுநாள் நிகழ்ச்சியில் இதனை வெளிப்படுத்தினார். 'இஸ்ரோ' தலைவர் நாராயணன், ரிஷிதாவை பாராட்டினார். அவரது பாராட்டால் ஊக்கம் பெற்ற ரிஷிதா, செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கிய 'ரோவர்' விண்கலம் போன்று தயாரித்தார். 'எனது தயாரிப்பு சிறியது, எடை குறைவு. உண்மையான ரோவரில் புரோகிராம் முன்கூட்டியே பதிவாகி இயங்கும். எனது ரோவர் வெளிச்சம் தன்மீது படுவதை வைத்தே இயங்கும்' என்கிறார். தமிழக அரசு மாணவ எழுத்தாளர்களை உருவாக்க நடத்திய வாசிப்பு இயக்கத்தில் இவர் எழுதிய 'போட்டிக்கு ரெடியா' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். பள்ளியில் இளையோர் பார்லிமென்டில் 2 முறை 'பிரதமராக' தேர்வான ரிஷிதா, ''தனது நிர்வாகத்தில் தாமத மாணவர்கள் 30 சதவீதம் குறைந்துள்ளது, மரங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன்'' என்றார். மாநகராட்சி கமிஷனர் சித்ரா, இவரைப் போல ஆர்வமுள்ள மாணவர்கள் 10 பேரை ஐதராபாத்துக்கு அனுப்பினார். அங்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 'டி ஒர்க், டி ஹப்' மையத்திற்கு சென்ற ரிஷிதா, தனது படைப்புகளை காட்டியபோது அனைவரும் புருவம் உயர்த்தினர். இதற்கெல்லாம் பாட்டி மஞ்சுளா, பள்ளித் தலைமை ஆசிரியை நாகஜோதி, அறிவியல் ஆசிரியை கிருத்திகா, வகுப்பாசிரியர் ராஜேஸ்வரி, மாசாத்தியார் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி தந்த ஊக்கமே என்றதுடன், விண்வெளி விஞ்ஞானியாவதே லட்சியம் என்ற ஆசையையும் தெரிவித்தார். அவரை பாராட்ட: 97865 11466.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sivakumar Thappali Krishnamoorthy
நவ 10, 2025 11:12

வாழ்த்துக்கள் ...உங்களின் திறமை சிகரமாய் விளங்க வாழ்துகிறோம்.


Manikandan Rajkumar
நவ 10, 2025 08:51

உங்கள் கனவு நினைவாக வேண்டும்


முக்கிய வீடியோ