யாழ் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் சிறப்பான வரலாறு! சுவாரஸ்ய தகவல்
ஈழத்தின் வடபாகமாயுள்ள யாழ்ப்பாணக்குட நாட்டின் வடமுனையில் பருத்தித்துறை பட்டினத்தின் கீழ் திசையில்18 வது கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோயில் என்னும் பழம் பெரும் கிராமத்தின் மத்தியில் மருதநிலமும், நெய்தல் நிலமும், பாலை நிலமும் பொருந்திய வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய பூமியில் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான்ஆலயமும், அருள்மிகு மாளிகைத்திடல் கண்ணகை அம்மன் ஆலயமும் அமையப் பெற்றுள்ளது.இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் இன்ன காலத்திலே தோன்றியதென யாராலும் வரையறுத்துக் கூற முடியாது உள்ளது. இலங்கைத் தீவில் ஆதியில் இயக்கர், நாகர் என்ற இரண்டு சாதியினர் வாழ்ந்தார்களென்று வரலாறு கூறுகின்றது. இயக்கர் பைசாசு வழிபாட்டினையும் நாகர் சர்ப்ப வழிபாட்டினையும் உடையவர்களாக இருந்துள்ளனர் என அறியக்கிடக்கின்றது.ஆதியிலே இக் கிராமம் நாகரின் சிற்றூராக இருந்ததாகவும் நாகர் இனத்தவர் நாகவழிபாடு உடையவர்களென்றும் இவர்கள் தங்கள் தலைவனை தம்பிரான் என்றுஅழைக்கும் வழக்கம் உடையவர்களென்றும் ஆன்றோர் கூறுவர்.இவர்கள் தமது தலைவனது பெயரினையும் தங்கள் இனத்தின் பெயரினையும் இணைத்து தாம் வழிபடும் தெய்வத்திற்கு நாகதம்பிரான் என்னும் பெயரினைச் சூட்டி நாகவழிபாட்டினை மேற்கொண்டிருந்தனர் என்று நம்மவர் கூறுவர்.இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள இடம் ஆதியில் அத்தி, ஆல். சந்தனம், சம்பு, கொக்கட்டி, நாவல், நல்வேம்பு, மருது முதலிய பெரு நிழல்தரு விருட்சங்களும், தண்டாமரை வாவிகளும், நீராடு கேணிகளும் நிறைந்து விளங்கியதென்பதை இங்கு காணப்படும் பழைய நூற்பாக்களால் அறிய முடிகின்றது.ஏனைய விருட்சங்கள் அருகிய போதிலும் வானளாவிய மருத மரங்கள் இன்றும் மங்காத மகிழ்வூட்டும் சோலையாகவிளங்குவதோடு அதுவே இத்தல விருட்சமாகவும் போற்றிப் பேணப்படுகின்றது.பின்னர் சேர, சோழ, பாண்டிய மண்டலங்களிலிருந்து வந்து குடியேறிய காலத்து நாகர்கோயிலும், அவர்கள் வசமாகியதாம். முன்பு நாகர் வழிபாடு செய்த இடத்தில்திருவருள் விளங்கக் கண்ட இம்மக்கள் தாமும் அம்மரவடியில் மெய்யன்போடு இறைவழிபாட்டினை மேற்கொண்டு வந்துள்ளனர்.இம் மக்களின் பக்தி விசுவசத்தைக் கண்ட எம்பெருமான் அடியவர்களுக்கு அருள்புரிந்து வந்தார். நாகர்கோயில் என்னும் இப்பழம்பெரும் கிராமத்தில் பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் மோகாம்புரி என்னும் பெயரையுடைய பொற்கொல்லர் ஒருவர் குடாரப்புதட்டார் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்திருந்தார். அவர் ஒரு சிறந்த பக்திமானாவர். அவர் இவ்வாலய வழிபாட்டுக்கு செல்லும் போதெல்லாம் எம்பெருமான் உன்னை யாரென்றறியவும் காணவும் அடியேன் விரும்புகிறேன் என்று வணங்கிச் செல்வாராம்.ஒருநாள் அந்நாட்டு மன்னன் அப்பொற்கொல்லனை அழைத்து தமது மக்கள் வழிபடும் அம்மூர்த்திக்கு ஒரு திருவுரு அமைத்துத் தருமாறு வேண்டி பொன் பொருள்முதலியவற்றை கொடுத்தானாம். மன்னன் கட்டளையை மறுக்க முடியாத மோகாம்புரி என்னும் பொற்கொல்லர் இம்மரவடித் தெய்வம் எத்தெய்வமோ நானறியேன். எப்படி நான் உன் திருவுருவை அமைப்பேன் நீதான் எனக்கு அருள்புரிய புரிய வேண்டும் என்று வேண்டி நின்றானாம்.நம்பினார்கைவிடப்படுவதில்லை. நம்பினார்க்குஅருள்புரியும் எம்பெருமான் அவனது கனவிலேதோன்றி அன்பனே நீ கவலைப்படதேஆதிநாதனின்திருவுருவை நீ வழிபடும்இடத்திற்கு அருகாமையில் உள்ள “அத்தி” மரத்தில் காண்பாய் அதன்படி அரசன்பணியை நிறைவேற்றுவாய் என்று கூறி மறைந்தருளினார்.மறுநாள் அதிகாலை வைகறைப்பொழுதில்எழுந்தவுடன் தான் வழிபடும் இடத்திற்குஅருகாமையில் உள்ள “அத்தி” மரத்தடிக்கு சென்று பார்த்தபோதுவிழுதே விடாதஅத்தி மரத்தில் விழுது ஒன்று ஐந்து தலை நாகரூபமாகஆடக்கண்டு மெய்சிலிர்த்துபக்திப்பரவசமாகி வீடு சென்று தனது கைப்பட தாமிரத்தாலான ஒரு நாகபடத்தைவடித்து அரசன் பணியை நிறைவேற்றி எம்பெருமான் ஆசியையும் அரசனின் மதிப்பையும்பெற்றான் என்பது எம்முன்னோர் கூற்று.அன்று முதல் அத்திருநாகபடமேஇவ்லாலயத்தின்மூலமூர்த்தியாக விளங்கி அடியார்களுக்குஅருள்புரிந்து வருகிறார்.- நமது செய்தியாளர் ஞானகுணாளன்