கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெள்ளி விழா
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வெள்ளி விழா, அக்டோபர் நான்காம் நாள் 2025 மாலை JC பான்க்வெட் மண்டபத்தில் தமிழ் ஆர்வலர்கள், புரவலர்கள், தொழிலதிபர்கள், இலக்கிய தோட்டத்தின் இயக்குனர்கள், குறிப்பாக பெருமைமிகு இக்கனடிய விருதை பெற வந்துள்ள கலைஞர்கள், படைப்பாளிகள் புடைசூழ, உலக அரங்கில் படைப்புலகில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள கனடிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தலைமையில் சிறப்பாய் மெருகேறியது. தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய இரு விருதுகளான வாழ்நாள் சாதனையாளர் விருதை முறையே சச்சிதானந்தன் சுகிர்த்தராஜா மற்றும் தமிழகத்தை சேர்ந்த யுவன் சந்திரசேகர் பெற்றுக்கொண்டனர். இரவி அருணாசலம்- புனைவு பரிசு ( பம்பாய் சைக்கிள்), த.பிச்சாண்டி- அல்புனைவுப் பரிசு ( எனக்குள் மணக்கும் எம்.ஜி.ஆர் நினைவுகள்). ரவி சுப்ரமணியன்- கவிதை பரிசு ( அருகிருக்கும் தனியன்), றியாஸா எம். ஸவாஹிர்- கவிதை பரிசு (நிலங்களின் வாசம்), நீத்ரா ரொட்ரிகோ- மொழியாக்கத்துக்கான பரிசு (prison of Dreams) பெற்றனர். இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை இதற்கு முன்னர் சுந்தர ராமசாமி, அம்பை, கி.பழனிச்சாமி, ஜராவதம் மகாதேவன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வண்ணதாசன், இமயம் ஆர்.பாலகிருஷ்ணன் போன்ற முக்கிய படைப்பாளிகள் பெற்றுள்ளனர். இனி வரும் காலங்களில் தமிழ் இலக்கியத்தோட்டத்தின் விருது 'அ.முத்துலிங்கம் இலக்கிய விருது' என வழங்கப்படும் என அறிவித்தபொழுது மண்டபத்தில் கரகோஷம் விண்ணைபிளந்தது. பரிசை பெற்ற கவிஞர் ரவி சுப்ரமணியம் கூறும்பொழுது நாங்கள் கடந்த நான்காண்டுகளாக அ.முத்துலிங்கம் விருது என்ற பெயரில் மொழியாக்கங்களுக்கு விருதுகள் தாய் தமிழகத்தில் வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்று கூறி பலத்த கை தட்டல்களைப் பெற்றுக்கொண்டார். இனிவரும் படைப்புலகம் ஒப்பீட்டிற்கு மேற்கத்திய எழுத்துலக மேற்கோளை காட்டுவதற்குப் பதிலாக நமது பாரதியையோ, அம்பையையோ, ஜெயகாந்தனை ஒப்பிடும் காலம் வெகு அருகில் என மேடையில் ஒலித்தது. நிகழ்விற்குப் பல முக்கிய ஆளுமைகள் கவிஞர் புகாரி, காலம் செல்வம் கவிஞர் சேரன், எழுத்தாளர் புஷ்பா கிறிஸ்டி, பேராசிரியர் பாலசுந்தரம் மற்றும் அஸம்பரம் கனி வருகை தந்து சிறப்பித்தனர். விருதைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! ஆக்கம்: தினமலர் வாசகர் சுதர்சன் மீனாட்சிசுந்தரம் - அமெரிக்காவிலிருந்து நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்