ஜெய்பீம் விவகாரம் - நிபந்தனையற்ற மன்னிப்பு, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு சூர்யாவுக்கு நோட்டீஸ்
சென்னை : ஜெய்பீம் படம் தொடர்பாக சூர்யா, ஜோதி உள்ளிட்ட படக்குழுவிற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வன்னியர் சமூகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா தயாரிப்பு, நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான படம் ஜெய்பீம். படத்திற்கு பரவலாக பாராட்டுகள் ஒருபுறம் கிடைத்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தியதயாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக படத்தில் வரும் போலீஸ் கேரக்டரின் பெயர் மாற்றம், சில காட்சிகளில் இருந்த குறியீட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் படத்தில் இருந்த அந்த குறியீடு மாற்றப்பட்டது.
‛‛ஜெய்பீம் படத்தில் பழங்குடி இளைஞர் ராஜாக்கண்ணுவை கொலை செய்த போலீஸ் அதிகாரியின் உண்மை பெயர் அந்தோணிசாமி என்பதற்கு பதிலாக குருமூர்த்தி என மாற்றியது ஏன் என்று பதிலளிக்க வேண்டும் என நடிகர் சூர்யாவுக்கு பா.ம.க., இளைஞணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதி இருந்தார். இதற்கு பதிலளித்த சூர்யா ‛‛விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‛ரசிகர்கள் வரம்பு மீறாமல் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதிக் காக்க வேண்டும். பேச்சாகவோ அல்லது சமூகவலைதளம் வாயிலாகவோ எந்த ஒரு எதிர்வினையும் ஆற்ற வேண்டாம்' என சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.