ஆர்ஆர்ஆர் - சென்னை விழாவில் திரண்ட தெலுங்கு ரசிகர்கள்
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நாம் சென்னையில் இருக்கிறோமோ அல்லது ஐதராபாத்தில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் நேற்று வந்திருக்கும். அந்த அளவிற்கு விழா அரங்கில் தெலுங்கு ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
ஜுனியர் என்டிஆர் ரசிகர்கள், ராம் சரண் ரசிகர்கள் என பலர் சிறப்புப் பேருந்துகளில் விழாவிற்கு வந்து கலந்து கொண்டனர். சென்னைக்கு அருகில் உள்ள சித்தூர், நெல்லூர், திருப்பதி ஆகிய ஊர்களில் இருந்து பல இளம் ரசிகர்கள் வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் புகைப்படங்கள், கொடிகள் என ஏந்திக் கொண்டு விழா அரங்கில் 'ஜெய் என்டிஆர், ஜெய் ராம் சரண்' என கத்திக் கொண்டே இருந்தனர்.
விழா மேடையில் யார் என்ன பேசினார்கள் என்பது கூட சரியாகக் கேட்கவில்லை. அவ்வளவு பெரிய ஸ்பீக்கர்கள் இருந்தும் அதையும் மீறி ரசிகர்கள் குரல்கள் ஒலித்தது.
நிகழ்ச்சியில் பேசிய ஜுனியர் என்டிஆர், ராம் சரண் இருவருமே அவர்களது ரசிகர்களுக்கு நன்றி சொன்னதோடு, மாறி மாறியும் சொல்லிக் கொண்டனர். இருவருமே தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பேசி ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றனர்.