5 வருடங்களுக்கு பிறகு திரையில் தோன்றுகிறார் ஷாருக்கான்
ஷாருக்கான் படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியா 2018ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஓரிரு படங்களில் சிறப்பு தோற்றத்தில்தான் நடித்தார். ஜீரோ படமும் பெரிய தோல்வியை அடைந்தது.
இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். அதற்பிறகு சுதாரித்துக் கொண்டு தமிழ் இயக்குனர் அட்லியின் கதைக்கு ஓகே சொல்லி நடிக்க ஆரம்பித்தார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார். இந்த நிலையில் போதை பொருள் வழக்கில் மகன் ஆர்யன் கைதாக அவனை காப்பாற்ற வேண்டியது இருந்தது. மேலும் இது ஷாருக்கானை மனதளவில் தளரச் செய்தது.
இதற்கிடையில் ஷாருக்கான் கடந்த இரண்டு வருடங்களாக நடித்து வந்த படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். ஜான் ஆபிரஹாம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஷாருக்கான் படம் 5 வருட இடைவெளிக்கு பிறகு வெளிவருகிறது.