உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சித்தார்த் காதலை உறுதிப்படுத்திய ‛பொன்னியின் செல்வன்'

சித்தார்த் காதலை உறுதிப்படுத்திய ‛பொன்னியின் செல்வன்'

மணிரத்னத்திடம் உதவி இயக்குராக இருந்து, ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகரானவர் சித்தார்த். தமிழ் படங்களை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்தார், இந்தி படங்களிலும் நடித்தார். மேக்னா என்பவரை திருமணம் செய்த சித்தார்த் 2007ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவர் ஸ்ருதிஹாசன், சமந்தாவை காதலித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சித்தார்த் மகாசமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருடன் நடித்தவர் அதிதிராவ். இவர் தமிழில் சிருங்காரம் படத்தில் நடித்து இங்கு வாய்ப்பு கிடைக்காமல் மும்பை சென்று பாலிவுட் நடிகை ஆனார். அதன்பிறகு மீண்டும் தமிழுக்கு திரும்பி காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹேய் சினாமிகா படங்களில் நடித்தார்.

சித்தார்த்தும், அதிதிராவும் காதலித்து வருவதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சமீப காலமாக தகவல்கள் வெளியானது. இதனை இருவரும் ஒப்புக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை.

இந்த நிலையில் சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சித்தார்த்தும், அதிதிராவும் ஒரே காரில் வந்து இறங்கினார்கள். ஒன்றாக அமர்ந்து விழாவை ரசித்தார்கள், மேடையில் ஆயுத எழுத்து படத்தின் பாடலை இசை குழுவினர் பாடியபோது சித்தார்த், திரிஷா துள்ளி குதித்தனர். அதிதிராவ் அவரை உற்சாகப்படுத்தினார்.

இதன் மூலம் இருவரின் காதல் உறுதியாகி இருப்பதாகவும், இதனை அவர்கள் வெளிஉலகத்துக்கு அறிவிப்பதற்காகவே ஒன்றாக விழாவுக்கு வந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !