உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னை

கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னை

கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் உலகமெங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தியாவில் இந்த படத்திற்கு என தனி ரசிகர் கூட்டம் எல்லா மொழிகளிலும் உள்ளது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் அவதார் - வே ஆப் வாட்டர் என்கிற பெயரில் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இந்த படத்தை திரையிடுவது தொடர்பாக இந்தப்படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பங்கு தொகை தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.

விநியோகஸ்தர்கள் முதல் இரண்டு வாரங்களில் இந்த படத்திற்கு வசூலாகும் தொகையில் வழக்கமாக தாங்கள் பெற்று வரும் பங்கு தொகையை விட 5 சதவீதம் கூடுதலாக கேட்டு நிர்ப்பந்தித்தனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ வழக்கமாக கொடுக்கப்பட்டு வரும் பங்கை மட்டுமே கொடுக்க முடியும் என்றும் மேலும் இந்த பிரச்னை நீடித்தால் அவதார்-2 படத்தை கேரளாவில் திரையிட மாட்டோம் என்றும் போர்க்கொடி தூக்கினார்கள்.

இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விநியோகஸ்தர்கள் ஒருபடி கீழே இறங்கிவந்து வழக்கமான பங்குத்தொகை பெறுவதற்கு சம்மதித்து விட்டதால் தற்போது இந்த பிரச்னை சுமூக முடிவுக்கு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !