உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கண்டசாலாவின் குரலுக்கு ஓய்வில்லை: முன்னாள் துணை ஜனாதிபதி புகழாரம்

கண்டசாலாவின் குரலுக்கு ஓய்வில்லை: முன்னாள் துணை ஜனாதிபதி புகழாரம்

பழம்பெரும் பின்னணி பாடகர் கண்டசாலாவின் நூற்றாண்டு விழா நேற்று சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

தெலுங்கு சினிமா உலகில் இரண்டு தலைமுறை ரசிகர்களை ஈர்த்த பெருமை கண்டசாலாவுக்கு உண்டு. அவரது படைப்புகளை, இளம் தலைமுறையினர் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். தனது மயக்கும் குரலால் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞர் அவர்.
உலகளவில் அவரது குரலுக்கு அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரது பாடல்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களும் என்றுமே என்னால் மறக்க முடியாதவை. கண்டசாலாவின் குரலுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. மனதை மகிழ்ச்சியாக்கும் வல்லமை அந்த குரலுக்கு இருக்கிறது. அவரது காலம் தெலுங்கு சினிமாவின் பொற்காலம். தமிழ் உள்பட பிறமொழிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

நாகரிகம் என்ற பெயரில் நமது அடையாளத்தை மறக்கக்கூடாது. எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். தாய்மொழியிலும் இசை கலந்திருக்கிறது. குழந்தை பருவத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே இசையின் தாக்கம் இருக்கும். கண்டசாலாவின் நூற்றாண்டு விழாவை இன்னும் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்றார்.

விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, டிரம்ஸ் சிவமணி, நாட்டிய கலைஞர்கள் நந்தினி ரமணி, சுதாராணி ரகுபதி, அவசரலா கன்யாகுமாரி, தாயன்பன் உள்ளிட்டோருக்கு கலா பிரியதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதை வெங்கையா நாயுடு வழங்கினார்.

விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவை கண்டசலா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !