படப்பிடிப்பில் இறந்த லைட்மேன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: தயாரிப்பாளர் வழங்கினார்
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி, ராஜீவ் மேனன் ஆகியோர் நடிக்கும் படம் ‛வெப்பன்'. இதன் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட விபத்தில் குமார் என்ற லைட்மேன் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் 12 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, லைட்மேன் சங்கத் தலைவர் செந்தில் ஆகியோரின் முன்னிலையில் இந்த நிதி குமாரின் மனைவி ஜூலியட் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து தயாரிப்பாளர் மன்சூர் கூறும்போது “குமாரின் எதிர்பாராத மறைவு எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததைப் போன்ற வேதனையைத் தந்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் தன் தொழிலுக்காக இரவும் பகலும் செலவழித்த ஒருவரை இழந்துள்ளது மனதைக் கனக்கச் செய்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது. அவர்களுடைய குடும்பத்திற்கு நிவாரணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில் ஒரு சிறு பகுதியாக இருக்க விரும்பினேன்.
அதனால் ஒரு சிறிய பங்களிப்பைச் செய்தேன். குமார் என்றென்றும் என் பிரார்த்தனையில் இருப்பார். அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்வேன். மேலும் உறுதியான நம்பிக்கையுடனும், சக்தியுடனும் அவரது குடும்பத்தினர் நலமுடன் இருப்பதைக் காண விரும்புகிறேன். என்றார்.