இரண்டாம் பாகத்தில் மீண்டும் 'பையா' கூட்டணி ?
'பருத்தி வீரன்' படத்தில் அறிமுகமான கார்த்திக்கு இரண்டாவதாக வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படம் பெயரை வாங்கித் தந்தாலும் வெற்றியை வாங்கித் தரவில்லை. அதற்கடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடித்து 2010ல் வெளிவந்த 'பையா' படம் அவருக்கு நல்லதொரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. அந்தப் படத்தில்தான் மாடர்ன் கார்த்தியைப் பார்க்க முடிந்தது. ஒரு சாலைப் பயணக் கதையாக அமைந்த அப்படத்தின் வெற்றிக்கு யுவன் இசையில் வெளிவந்த பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த சில வாரங்களாக 'பையா' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சில தகவல்கள் வெளிவந்தது. அப்படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாகவும் சொன்னார்கள். ஆனால், இப்போது 'பையா' கூட்டணியே மீண்டும் இணைய உள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் கார்த்தியை சந்தித்து 'பையா 2' கதையை லிங்குசாமி சொன்னதாகவும், அவருக்கு கதை பிடித்துப் போய் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
லிங்குசாமி இயக்கத்தில் 'பையா' படத்திற்குப் பிறகு கடந்த 13 வருடங்களில் வெளிவந்த 'வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2, த வாரியர்' ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன. இவற்றில் வேட்டை படம் சுமாரான வெற்றியை பெற்றது. மற்ற படங்கள் தோல்வியைத்தான் தழுவின. 'பையா' கூட்டணியுடன் மீண்டும் வெற்றிப் பயணத்தில் இணைவாரா என்பது அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.