10 படங்களுக்கு மேல் இயக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் அதிரடி
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் தற்போது விஜய்யை வைத்து ‛லியோ' படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வருகிறார். வருகிற ஜூன் 22ல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு முதல்பாடலாக நா ரெடி-யை வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் சினிமாவில் அதிக படங்களை இயக்க விரும்பவில்லை. இன்னும் 10 படத்தை இயக்கிய பிறகு படங்களை இயக்கமாட்டேன். எல்.சி.யு கான்செப்ட் தயாரிப்பாளர்களின் உதவி இல்லாமல் உருவாக்கிருக்க முடியாது. அதற்காக எப்போதும் நன்றியோடு இருப்பேன். நான் சஞ்சய் படத்தின் பெரிய ரசிகன். லியோ படப்பிடிப்பு துவங்கி 3 நாட்களில் என்னை அவர் மகன் என்று அழைத்தார் . நான் எல்லா நடிகர்களையும் சார் என்று தான் அழைப்பேன். மாஸ்டர் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதில் இருந்து நான் விஜயை அண்ணா என்று தான் அழைப்பேன். படப்பிடிப்பு தளத்திலும் அனைவரும் அவரை அண்ணா என்று தான் அழைப்பார்கள். அந்த இடத்தை விஜய் கொடுத்திருக்கிறார். ஜூன் 22 அன்று நான் ரெடி பாடல் அல்லாமல் ரசிகர்களுக்காக மற்றொரு மிகப் பெரிய சர்ப்ரைஸ் உள்ளது என தெரிவித்துள்ளார்.