மீரா நந்தனுக்கு திருமண நிச்சயதார்த்தம் : லண்டன் மாப்பிள்ளையை மணக்கிறார்
தமிழில் ‛‛வால்மீகி, அய்யனார், சண்டமாருதம்'' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மீரா நந்தன். கடந்த 2016ல் திடீரென சினிமாவை விட்டு ஒதுங்கி துபாய்க்கு சென்று அங்கே உள்ள பிரபல எப்எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்ற துவங்கினார் மீரா நந்தன். அதன்பிறகு எப்போதாவது ஓரிரு மலையாள படங்களில் மட்டும் வந்து நடித்துவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போதும் துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார் மீரா நந்தன். இந்த நிலையில் தற்போது லண்டனை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் மீரா நந்தன்.
பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்ட இவர்களது திருமண நிச்சயதார்த்தம் தற்போது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. திருமணம் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் மீரா நந்தன் திருமணம் பற்றி கூறும்போது, ‛‛திருமணம் செய்யாமல் தனியாக வாழ்வதுதான் தனக்கு பிடித்திருக்கிறது என்றும், தான் திருமணமே செய்யப் போவதில்லை'' என்றும் கூறியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.