விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபோது சிறிது நேரம் அவரது உடலை பார்த்து கனத்த இதயத்துடன் கலங்கி போய் நின்று அஞ்சலி செலுத்தினார் விஜய்.
நடிகர் விஜய்யின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” தோல்வியடைய, விஜயகாந்தோடு விஜய் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அது அவரது திரை வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணிய விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்காக, தானே மனமுவந்து விஜயகாந்த் நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “செந்தூரப்பாண்டி”. மிகப் பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்குப் பின் விஜய்யின் திரைப்பயணமும் பிரகாசமானது. விஜய்யின் சினிமா வளர்ச்சியில் விஜயகாந்த்தின் பங்கு அளப்பரியது. அவரின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் விஜய் நடித்துள்ளார். விஜய் ஹீரோவான பின் அவருக்கு வெற்றி படத்தையும் கொடுத்தது விஜயகாந்த் என்றால் மிகையல்ல.