வேட்டையன் டப்பிங்கை துவங்கிய பஹத் பாசில்
ஜெய் பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ.ஞானவேலுக்கு அந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி காரணமாக இரண்டாவது படத்திலேயே நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்து, தற்போது ‛வேட்டையன்' என்கிற படத்தை இயக்கி முடித்தும் விட்டார். ரஜினிகாந்த் மட்டுமல்ல இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல மொழிகளை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த்-பஹத் பாசில் என்கிற காம்பினேசனும் படத்தில் இவர்கள் இருவரும் காமெடியில் கலக்கியுள்ளார்கள் என்கிற தகவலும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
அக்டோபர் பத்தாம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகர் பஹத் பாசில் வேட்டையன் படத்தின் டப்பிங்கை பேச துவங்கியுள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் அவர் நடித்த விக்ரம் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களிலும் தானே சொந்த குரலில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.