இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால் கடந்த ஏழு வருடங்களில் 'பாகமதி, சைலன்ஸ், மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக உடல் எடையைக் கூட்டிய பின் அதை அவரால் மீண்டும் குறைக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது. 'பாகுபலி 2' படத்தில் கூட கிராபிக்ஸ் மூலம் அவரது தோற்றத்தை சரி செய்தார்கள் என்றும் சொன்னார்கள்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கிரிஷ் இயக்கத்தில் 'காட்டி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் அனுஷ்கா. கடந்த மார்ச் மாதம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்பாகவே ஜனவரி மாதத்தில் சில நாட்கள் மட்டும் நடந்த படப்பிடிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம். ஆந்திரா, ஒடிஷா எல்லையில் கஞ்சா கடத்தல் பற்றிய கதையாக இப்படம் உருவாகி வருகிறது என்பது தகவல். 'வேதம்' படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் மீண்டும் இணைகிறது கிரிஷ் - அனுஷ்கா கூட்டணி.