இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ
ஒரு நடிகராக தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்திய நடிகர் தனுஷ் தனது டைரக்சன் ஆசைக்கும் தீனி போடும் விதமாக ப பாண்டி என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். அடுத்ததாக அவர் இயக்கிய ராயன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் அவர் மூன்றாவதாக இயக்கி வருகிறார்.
அந்த படத்தின் வேலைகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இட்லி கடை என்கிற தனது நான்காவது படத்தையும் இயக்கி வருகிறார் நடிகர் தனுஷ். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் தனுஷுடன் சேர்ந்து முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது.
நேற்று முன் தினம் சென்னையில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்த தனுஷ் அன்றைய தினமே இட்லி கடை படப்பிடிப்பதற்காக தேனிக்கு கிளம்பி வந்துவிட்டார். இந்த நிலையில் தனுஷ் ஒரு காட்சியை தன் அருகில் இருப்பவர்களுக்கு விவரித்து கூறும் விதமான ஒரு வீடியோ ஒன்று படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்துள்ளது. கிராமத்து தெருக்களில் தனுஷ் தற்போது காட்சிகளை படமாக்கி வருகிறார் என்பதை அந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.