உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த எம்ஜிஆர்

பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த எம்ஜிஆர்

மக்கள் திலகம் எம்ஜிஆர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும், அவர் சார்ந்திருந்த கட்சி கடவுள் நம்பிக்கைக்கு மாறானதாக இருந்ததால் புராண மற்றும் பக்தி படங்களில் அவர் நடிக்கவில்லை. ஆனால் அவர் ஆரம்ப காலகட்டத்தில் சில புராண படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது 'தக்ஷயாகனம்' என்ற புராண படம். இதில் அவர் கிருஷ்ணராக பெரிய கேரக்டரில் நடித்தார்.

1938ம் ஆண்டு வெளியான இந்தப்படம் சிவபுராணத்தை அடிப்படையாக கொண்டது. கதைப்படி சிவனின் எதிரியான தக்ஷனின் மகள் சக்தி (பார்வதி) சிவனை விரும்பி மணந்து கொள்கிறார். சிவனை மருமகனாக ஏற்றுக் கொள்ளாத தக்ஷன் ஒரு யாகம் வளர்கிறார். இதற்கு சிவனைத் தவிர மற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறார் தக்ஷன். ஆனால் சிவனின் மனைவி சிவன் பேச்சையும் மீறி தந்தை வளர்க்கும் யாகத்தில் கலந்து கொள்கிறார்.

ஆனால் மகளையும் அவமானப்படுத்துகிறார் தக்ஷன். இதனால் மனம் வெறுத்த சக்தி அந்த யாகத்தில் குதித்து உயிர் துறக்கிறார். இதனால் சிவன் தாண்டவம் ஆடுகிறார். அண்டசராசரங்களும் நடுங்கிறது. அப்போது கிருஷ்ணன் தோன்றி பிரச்சினையை தீர்க்கிறார். தீயில் குதித்த சக்தியை பல பாகங்களாக பிரித்து உலகம் முழுக்க வீசி எறிகிறார். அவைகள் சக்தி பீடங்களாக மாறி, மக்களுக்கு அருள் பாலிக்கிறது. இதுதான் கதை.

மவுன படங்கள் காலம் முதல் 1980 வரை இந்த கதை பல மொழிகளில் படமாக உருவாகி உள்ளது. அவற்றில் சில வெற்றியும், சில தோல்வியும் அடைந்திருக்கிறது. தமிழில் வெளியான இந்த படமும் தோல்வி அடைந்தது. இதில் சிவனாக வி.ஏ.செல்லப்பாவும், சக்தியாக எம்.எம்.ராதா பாயும் நடித்திருந்தார்கள். என்.எஸ்.கிருஷ்ணனும், டி.ஏ.மதுரமும் காமெடி காட்சிகளில் நடித்திருந்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !